பேக்கிங் உணவு… பேஷான வருமானம்!
சா லையில் சிக்னலில் கொஞ்சநேரம்
காத்திருந்து பார்த்தால், நகரும் வண்டிகளில் நாலுக்கு ஒரு வண்டி உணவுகளைச் சுமந்து செல்லும் மொபைல் கேட்டரிங் வண்டிகளாகத்தான் இருக்கின்றன.
பெருநகரங்களில் உணவுப் பொருட்களைக் கொண்டுவந்து கொடுக்கும் தொழிலுக்கு வரவேற்பு அதிகமாகிக்கொண்டே போகிறது. அதோடு, சிறு நகரங்களும் வளர்ந்துகொண்டே போவதால், சுவையாகவும் சுகாதாரமாகவும் கொடுக்கத் தயாராக இருந்தால், எத்தனை பேர் வந்தாலும் இந்தத் தொழிலுக்கு வாய்ப்பு இருக்கிறது.
அலுவலகங்களில் வேலைபார்ப்பவர்களின் மதிய உணவாக இருந்தாலும், தனியாக அறை எடுத்துத் தங்கியிருக்கும் ஆட்களாக இருந்தாலும் அவர்களது தேவை நல்ல சாப்பாடு! அத்தேவையைப் பூர்த்திசெய்வது நல்ல தொழில் வாய்ப்பாக இருக்கும். அதோடு, சமையல் தொழில் என்பது பாதிக்குப் பாதி லாபம் கிடைக்கக்கூடியது. அவர்கள் இருக்கும் இடத்தைத் தேடிப்போய் உணவை வழங்குவதுதான் இந்தத் தொழிலின் அடிப்படை!
பெரிய அளவில் ஓட்டல் நடத்துபவர்கள்தான் இப்படிப்பட்ட தொழிலைச் செய்யமுடியும் என்று இல்லை. சாதாரணமாக வீட்டில் இருப்பவர்கள்கூட, இந்தத் தொழிலைச் செய்ய முடியும். நன்கு சமைக்கத் தெரிந்திருக்க வேண்டும், அவ்வளவுதான்!
முதலில் உங்கள் வீடு இருக்கும் பகுதியில் என்ன மாதிரியான அலுவலகங்கள் இருக்கின்றன, இளைஞர்கள் தங்கியிருக்கும் மேன்ஷன்கள் இருக்கின்றனவா என்ற தகவல்களைத் திரட்டிக்கொள்ளுங்கள். ஆரம்ப சுழற்சிக்குப் பிறகு, நம்முடைய கேட்டரிங் சர்வீஸ் பற்றி பிட் நோட்டீஸ் அடித்து அருகில் உள்ள அலுவலகங்கள், கடைப்பகுதிகளில் விநியோகிக்கலாம்.
அதில் உங்களிடம் எத்தனை பேர் சாப்பாடு வாங்கத் தயாராக இருக்கிறார்கள், அவர்களுக்கு என்ன மாதிரி உணவு வகைகள் தேவைப்படும் என்ற விவரங்கள் கிடைத்துவிடும். அதை வைத்து அடுத்தகட்டத்துக்கு நகர வேண்டியதுதான்.
குறைந்தபட்சம் இருபது பேருக்கான சாப்பாடு ஆர்டரைத் திரட்டிக்கொண்டு தொழிலை ஆரம்பிப்பது நல்லது. அப்போதுதான் அடிப்படையான லாபமாவது நமக்கு மிஞ்சும். நல்ல தரமான அரிசி, மசாலாப் பொருட்களை வாங்கிச் சமைக்கவேண்டும். தரம்தான் நம்முடைய விசிட்டிங் கார்ட். அதோடு, உணவு விஷயத்தில் எத்தனைக்கு எத்தனை லாபம் அதிகமாக இருக்கிறதோ அந்தளவுக்கு ரிஸ்க்கும் இருக்கிறது. அதை கவனத்தில் வைத்து சமையலில் ஈடுபடவேண்டும்.
இப்போதே சில இடங்களில் மதிய உணவை அலுவலகங்களில் கொண்டுபோய்க் கொடுப்பது நடைமுறையில் இருக்கத்தான் செய்கிறது. அவர்கள் எல்லோரும் பெரும்பாலும் டிபன் கேரியரில் சாப்பாடு எடுத்துச்சென்று கொடுக்கிறார்கள். அதனால், சுகாதாரம் குறித்த சிறு சந்தேகத்துடன்தான் உணவைச் சாப்பிட வேண்டியிருக்கும். அதைத் தவிர்க்கும் வகையில் அழகான அலுமினியம் ஃபாயில் பேக்கிங்கில் சாப்பாட்டை வைத்துக் கொடுப்பதன் மூலம் சுகாதாரம் பற்றிய கவலையில்லாமல் ஆட்களை வாங்க வைக்கலாம். அதோடு, கேரியரை மீண்டும் சேகரிக்கும் வேலையும் மிச்சம்.
பொதுவாக மதிய உணவு என்றால் சாதம், சாம்பார், ரசம், மோர், பொரியல்தான் கொடுப் பார்கள். இதுதவிர, காரக் குழம்பு, தயிர் என்றால் கூடுதல் காசு கொடுக்கவேண்டும். ஆரம்பத்தில் காரக் குழம்பை இலவசமாகக் கொடுப்பது, தயிரைக் குறைந்த விலைக்குத் தருவது போன்ற சலுகைகளை அளித்து வாடிக்கையாளர்களைக் கவரலாம்.
தொழில் கொஞ்சம் பெரிதாகும்போது அதற்கென பாத்திரங்களை வாங்கி, உதவிக்கு இரண்டு ஆட்களை வைத்துக்கொண்டு பெரிய அளவில் செய்யலாம்.
நம்முடைய சப்ளையில் பேக்கிங் முக்கியமான இடத்தைப் பிடிக்கிறது. அழகாக பேக் செய்யும் வகையில் அலுமினியம் ஃபாயில் கவர்கள் கிடைக்கின்றன. சாதத்தை அந்த பேக்கிங்கில் கொடுத்துவிட்டு குழம்பு, கூட்டு பொரியல் எல்லாவற்றையும் சாதாரண பாலிதீன் பைகளில் கட்டிக் கொடுக்கலாம். அந்த ஃபாயில் கவர் களை சீல் செய்வதற்கு மெஷின் வாங்கி வைத்துக் கொண்டால் போதும்.
நம்முடைய ஆரம்பகட்ட ஆர்டர் தாண்டி போன் மூலம் ஆர்டர் கொடுப்பவர்களுக்கு சப்ளை செய்யலாம். அந்த போன்கால்களை மதியம் 12 மணியோடு நிறுத்திக்கொள்ளவேண்டும். அப்போதுதான் அவர்களுக்கான உணவைக் கூடுதலாகத் தயாரிக்க முடியும். அதிகபட்சம் அரை மணிநேரத்துக்குள் கொண்டு போய் சப்ளை செய்யும் தூரத்தில் ஆர்டர் எடுத்துக்கொள்வது நல்லது.
கொஞ்சம் பிஸினஸ் சூடுபிடித் ததற்குப் பிறகு, அலுவலகங்களுக்கு அருகில் ஓர் இடம் பார்த்து கவுன்டர் அமைத்து விற்பனை செய்யலாம். அதனால், ஒரு வேளை அலுவலக விற்பனையில் தொய்வு ஏற்பட்டால், இந்த வியாபாரத்தின் மூலம் சமாளித்துவிடலாம்.
ஆரம்ப மூலதனமாக இருபதாயிரம் ரூபாய்வரை தேவைப்படும். அதன்பிறகு தினசரி வருமானம் செலவுகளை சமாளிக்க உதவும். இந்தத் தொழிலைப் பொறுத்த அளவில் கடனுக்குக் கொடுப்பது என்பதை யோசிக்கவே கூடாது. அலுவலக பார்ட்டி, விழா, வீட்டு விசேஷம் என தொழிலை விரிவு படுத்த முடியும்.
பண்டிகை, நீண்ட விடுமுறைக் காலங்களில் தொழில் கொஞ்சம் மந்தமடிக்கும். அந்த நேரங்களில் சுதாரித்து தயாரிப்பைக் குறைத்துக் கொள்ளவேண்டும்.
முப்பது பேர் திருப்தியாகச் சாப்பிடவேண்டு மானால் நான்கு கிலோ அரிசியை வடித்து சாதமாக்க வேண்டும் என்பது கணக்கு. அதையே முப்பது பார்சல்கள் என்று வைத்து தயாரிப்புச் செலவுகளைக் கணக்கிட்டால், அரிசி, அதற்கான காய்கறிகள், மசாலாப் பொருட்கள், எரிபொருள் செலவு போக்குவரத்து மற்றும் பேக்கிங் செலவு எல்லாம் சேர்த்து சுமாராக 450 ரூபாய்வரை ஆகும். அதன்படி கணக்கிட்டால் ஒரு சாப்பாடு 15 ரூபாய். ஏழு ரூபாய் லாபம் வைத்து 22 ரூபாய்க்கு விற்பனை செய்ய முடியும். அப்படியானால், ஆரம்பகட்ட லாபம் ஒரு நாளைக்கு 200 ரூபாய்க்குக் குறையாமல் கிடைக்கும். நாள் போகப்போக இந்த லாபம் அதிகமாகும்.
சுவையான சாப்பாடு… சூடான லாபம். அப்படியானால், நல்ல தொழில்தானே!