சேலம் மாவட்ட புதிய போலீஸ் சூப்பிரண்டாக அபினவ் கடந்த சில நாட்களுக்கு முன்பு பதவியேற்று கொண்டார். அன்று முதல் சேலம் மாவட்டத்தில் சட்டம் -ஒழுங்கை பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
அதன்படி தற்போது ஊரடங்கையொட்டி மதுபான கடைகள் மூடப்பட்டு உள்ளன. இதனால் வெளிமாநிலம் மற்றும் மாவட்டங்களில் இருந்து சேலத்திற்கு மதுபானம் கடத்தி வருபவர்களை கைது செய்து நடவடிக்கை உத்தரவிட்டு உள்ளார்.
மேலும் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் வாகன சோதனைகள் நடத்தி குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளார். இந்த நிலையில் நேற்று போலீஸ் சூப்பிரண்டு அபினவ் மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர்களிடம் ஒலிபெருக்கியில் பேசினார்.
அப்போது அந்தந்த போலீஸ் நிலையத்துக்குட்பட்ட ரவுடிகளை உடனடியாக கைது செய்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவே தற்போது யார்? யார்? ரவுடி பட்டியலில் உள்ளனர் என்பது குறித்த விவரங்களை நாளை (இன்று) தயார்படுத்திக்கொள்ள வேண்டும். அதுகுறித்து ஆய்வு நடத்தப்படும் ரவுடிகள் மீது கைது நடவடிக்கை எடுக்க தவறினால் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க நேரிடும் என்று கூறியுள்ளார். இதை அடுத்து அந்தந்த போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் தற்போது ரவுடி பட்டியலில் யார்?யார்? உள்ளனர் என்பது குறித்து பட்டியலை தயார் செய்து வருகின்றனர்.
